புதன், 21 செப்டம்பர், 2022
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
வியாழன், 8 செப்டம்பர், 2022
சிவபுராணத்தின் பெருமைகள்
*ஸ்ரீ ராம ஜெயம்*🙏
#சிவபுராணம்_என்றால்_என்ன?
அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
சிவபுராணத்தின் பெருமைகள் :
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.
6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.
9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.
10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.
11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.
12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.
13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.
14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.
15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.
16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.
பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.
21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
ஓம் நமச்சிவாய..:pray_tone2:
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!
மூலமும் உரையும்...
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! (சிவபுராணம்)
**********************************
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
(“நமச்சிவாய” என்னும் ஐந்து எழுத்து வாழ்க! நாத தத்துவத்தில் விளங்கும் உன் திருவடி வாழ்க!)
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
(கண் இமைக்கும் பொழுதின் அளவு கூட, என் நெஞ்சைவிட்டு நீங்காதவனாகி உன் தாள் வாழ்க)
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
(திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை (மாணிக்கவாசகர்) ஆட்கொண்ட நாதனாகிய உன் மாணிக்க மணிகளின் மலர் அடி வாழ்க!)
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஆகமமாகிய ஞான நூலின் பொருளாக இருந்து, என்னை அணுகி (அண்ணிப்பான்) அருள் புரிபவனாகிய உன் திருவடி வாழ்க!)
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
(ஏகன் = நீயே ஒருவனாகவும், நீயே பல உருவங்களாகவும் இருந்து எல்லாப் பொருள்களிலும் தங்கும் இறைவனான உன் திருவடி வாழ்க!)🙏🌹
வியாழன், 1 செப்டம்பர், 2022
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம்
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்....
நன்றி ... வாழ்க வளமுடன்
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022
கிருஷ்ணன் கோவில்: 2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்!
கிருஷ்ணன் கோவில்: 2 நிமிடம் மட்டுமே மூடப்படும்
அதிசயக் கோவில்!
கோவில் மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்….
இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில்!
ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில்.
மூடுவதற்கு
நேரம் இல்லை.
இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும்
பசித்துக் கொண்டே இருக்குமாம்.
அற்புதம்!
1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில் அமைந்துள்ளது.
இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார்.
எனவே
23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.
கோயில்
2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.
11.58 மணி முதல்
12 மணி வரை.
இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,
கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது.
கிருஷ்ணரால்
பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால்,
ஏதாவது
ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது
கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர்
மிக உஷ்ணமாக இருந்தார்.
அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர்.
அபிஷேகம் முடிந்த பின், மூலவரின் தலையை முதலில் உலர்த்திய பின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும்,
பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,
கிரகணத்தின்
போது கூட கோயில் மூடப்படுவதில்லை.
அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர்
பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஒருமுறை, கோயில் கிரகணத்தின்
போது மூடப்பட்டது.
கதவைத் திறந்த போது, ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.
அந்த சமயத்தில்
வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார்.
அப்போதிருந்து, கிரகணத்தின்
போதும் அக் கோவில் மூடப்படுவதில்லை.
கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும்
11.58 மணி முதல்
12 மணி வரை.
2 நிமிடங்கள் மட்டுமே.
தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக “இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?” என அழைப்பார்.
பிரசாதம் வழங்குகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.
மற்றொரு
முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால்,
நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்காதாம்.
திருவார்பு
கிருஷ்ணா கோயில், திருவார்பூ, -686020
கோட்டையம் மாவட்டம்,
கேரள மாநிலம்.
கோவில் நடை
சாத்தும் நேரம் நள்ளிரவு நள்ளிரவு 11.58 மணி முதல்
12 மணி வரை…
பிரசாதம் பெறாமல் பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.
திங்கள், 3 ஜனவரி, 2022
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,திருக்செங்கோடு
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருக்செங்கோடு.
திருக்கோயில் அமைவிடம்:
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த தெய்வீகச் சிறப்பு மிக்க திருசெங்கோடு திருத்தலம். நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு 37 km தொலைவிலும், ராசிபுரத்தில் இருந்து 36 km தொலைவிலும், சேலத்தில் இருந்து 48 km தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 22 km தொலைவிலும், கரூரில் இருந்து 61 km தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 130 km தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.
குருக்கோடு நவமணியும் நவநிதியும் நவரசமும் கொழிக்குங்கோடு
தருக்கோடு சுருபியும் சிந்தாமணியும் தழைத்த தெய்வத்தான மாமால்
இருக்கோடு பலகலைகளாகமங்கள் குரவோர்களிரைக்குங்கோடு
செருக்கோடு முமையரனைப் பிரியாம லினிதிருக்கும் திருச்செங்கோடே!!
-- திருப்பணி மாலை
திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்
தல விருட்சம்: இலுப்பை மரம்
தல தீர்த்தம்: தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்தகன்னியர் தீர்த்தம், நாக தீர்த்தம்
திருத்தல அமைப்பு:
கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு திருத்தலம், கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில், மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது இத்தலம்.
இந்த திருச்செங்கோடு திருமலை சோணகிரி, இரத்தகிரி, சேடமலை, வாயுமலை, மேருமலை என பல்வேறு பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
ராசிபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக இத்திருத்தலத்தினை காணச் செல்லும்போது, சுமார் 15 km முன்பாகவே இந்த தெய்வீக மலையின் முழுத் தோற்றம் காணக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்களைத் தாண்டி இந்த மலையின் தோற்றம் காணும்போதே சிலிர்க்க வைக்கும் காட்சி. திருவண்ணாமலை போல மலையே தெய்வமாக அமைந்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும், இந்த மலையை பௌர்ணமி தோறும் கிரிவலம் வந்து வணங்குகின்றனர் பக்தர்கள். இந்தப் பாதை 6 km தூரம் கொண்டது. இந்த மலையின் வடிவழகைக் காண்பதற்கே ஒருமுறையாவது எல்லோரும் திருச்செங்கோடு செல்ல வேண்டும். ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பாதையில் ஊருக்குள் செல்வதற்கு முன்பாகவே இத்திருத்தலம் வந்து விடுகிறது.
மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 km தூரத்திற்கு மலையிலேயே சாலை அமைக்கப் பட்டுள்ளது. மலை ஏறும் போதே இந்த மலையைச் சுற்றி உள்ள சில மலைகளின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இந்த மலைச் சாலை திருக்கோயிலின் வாசல் வரை நம்மை அழைத்துச் செல்கிறது. நாங்கள் சென்றிருந்த நாளில் அடித்த வெய்யிலின் உக்கிரத்தில், திருசெங்கோடு பாறை மலையே தக தகவென மின்னியது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். இதுவே இத்திருக்கோயிலின் பெருஞ்சிறப்பு. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோயில் போற்றி பாடப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோயில் அமைப்புடன், ஒரே திருக்கோயிலாய் அமையப் பெற்ற திருத்தலம். ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது இத்திருத்தல அமைப்பு. இந்த திருச்செங்கோடு மலைக் கோயிலை மலைத்தம்பிரான் என்றும் அழைக்கின்றனர்.
இந்த திருக்கோயிலுடன் இணைக்கப்பெற்ற திருக்கோயில்களும், துணைக் கோயில்களும் பல உள்ளன.
1. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
2. அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோயில்
3. அருள்மிகு ஆபத்துக்காத்த விநாயகர் திருக்கோயில்
4. அருள்மிகு மலைக்காவலர் திருக்கோயில்
5. அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
6. அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோயில்
7. அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில்
என இந்தக் கோயில் வரிசையில் முதல் ஆறு கோயில்கள் திருச்செங்கோடு நகருக்குள்ளேயும், பாண்டீஸ்வரர் திருக்கோயில் குமாரமங்கலத்திலும் அமைந்துள்ளன.
சாலைவழியாக மட்டுமல்லாது, சுமார் 1210 படிகளைக் கடந்தும் மலைக்கோயிலைச் சென்றடையலாம். நாமக்கல் செல்லும் பாதையில் சிறுது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து படி வழியாகச் செல்லலாம். முதற்படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படியேறத் தொடங்கலாம். அருகிலேயே ஆறுமுகப் பெருமானது கோயில் அமைந்துள்ளது. இந்த முருகன் திருக்கோயிலின் முன்பிருக்கும் கிணற்றில் இருந்தே மலைக் கோயிலுக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. அதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோயில் உள்ளது. அதன் மேல்புறம் நந்தி கோயில் உள்ளது. இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபடுவர்.
நந்தி கோயிலில் இருந்து சற்றே கீழிறங்கினால் நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்துள்ளது. அதுவே நாகர் பள்ளம் என அழைக்கப்படுகிறது.
இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.
பின் உயரே சென்றால் சிங்க மண்டபம் உள்ளது. இதற்கு அடுத்து அமைந்துள்ளது அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள்.
இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை. இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது. பல்வேறு சண்டை சச்சரவுகள், வழக்குகள் இந்தப் படிகளின் மேல் செய்யப்படும் சத்தியத்தினால் முடிவுக்கு வருகின்றன என்று அங்கு ஈசனை காண வந்த பக்தர் சொல்லக் கேட்டோம். இதுபோன்ற ஐதீகங்களினால்தான் சத்தியங்களும், உண்மைகளும் ஓரளவேனும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.
வாழ்க மனிதனின் நல்ல நம்பிக்கைகள்!!
இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலின் ஆரம்பமாக உள்ளது. இந்த முருகன் கோயிலைக் கடந்தால் அறுபதாம்படி மண்டபம், இளைப்பாற்றி மண்டபம், கோபுரவாயில் மண்டபமும் மேலும் பல மண்டபங்களும் அமைந்துள்ளன.
இப்படியே பயணித்து திருக்கோயிலின் ராஜகோபுரத்தை அடைகிறோம். கோயிலின் உள்ளே நுழைந்த உடனே வலது புறத்தில் விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெறுகிறோம். பிள்ளையாரை வணங்கி பின்னர் செங்கோட்டு வேலவனின் சன்னதியை அடைகிறோம். இந்த அருள்மிகு செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்தை சிற்பங்கள் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ளன. இவ்விடத்தில் மட்டுமல்லாது, எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களிலும் பல்வேறு விதமான சிற்பங்கள் அணிவகுக்கின்றன. திருக்கோயில் முழுக்க உள்ள எல்லா தூண்களிலும் சிற்பக்கலையின் உன்னதம் உச்சத்தைப் பெறுகிறது. ஒவ்வொவொரு சிற்பங்களின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்துடனும், சிற்பங்களை ரசிப்பதிலேயே அதிக நேரம் செலவானது.
வாழ்க நமது திருக்கோயில்களும், அவற்றில் காணப்படும் எண்ணிலடங்கா சிற்பக் களஞ்சியங்களும் என்று மனதார வேண்டி அவற்றை செய்த சிற்பிகளை மனதார வணங்கி திருமுருகன், செங்கோட்டுவேலவனை வழிபடச் சென்றோம்.
தனது வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் என ஏந்திக்கொண்டு, நின்ற கோலத்தில், செங்கோட்டு வேலவனாக காட்சி தரும் முருகப்பெருமானது தரிசனம் காணக் கிடைக்கப் பெற்ற நமக்கு, நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானது வடிவழகைக் காண இரண்டு கண்கள் கண்டிப்பாக போதாது. இவ்வாறாக பேரழகன் முருகனின் அழகில் மயங்கியவாறே, அம்மையும் அப்பனுமாக ஒருசேர விளங்கும், அர்த்தநாரீஸ்வர சன்னதியை அடைகிறோம். அங்கே சன்னதியின் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறார். ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய், ஈருடல் ஓருயிர் என்னும் சொலவடைக்கு உண்மையிலேயே சரியானதொரு வடிவத்தை அங்கு கண்டு, உடலும் உள்ளமும் சிலிர்த்து, அம்மையப்பனை கண்ணிமை மூடாது, சுற்றி என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள் என்ற எந்த ஸ்வதீனமும் இல்லாமல், இந்த தெய்வீக நிலையிலிருந்து விடுபட சற்றுநேரம் ஆனது.
வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், தொன்மைக்கோலம் என்று அழைக்கிறார். இங்கிருத்து நாகேஸ்வரர் சன்னதியை அடைந்த பின், ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதை காணலாம். இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழுப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதி மரத்தால செய்யப்பட்டது. திருவிழாக் காலங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைபெறும்.
நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன.
இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோயில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும். பக்தர்கள் தங்களது வாழ்வு வளம் பெற இந்த புனித மரத்தினையும் சுற்றிவந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர்.
இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நதிகளையும் வணங்கி நலம் பெறுவோம்.
இத்திருக்கோயிலின் கிழக்கு திசையில் சுமார் 350 அடி உயரம் ஏறிச் செல்ல, சிறு குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம். உச்சிப் பிள்ளையார் கோயில் எனவும் இக்கோயில் அழைக்கப் படுகிறது. வந்தியா பாடன சிகரம் என்றும் வேறொரு பெயர் உண்டு.
திருத்தல வரலாறு:
திருச்செங்கோடு திருமலை உருவான வரலாறு:
ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம். அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன.
இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.
உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு:
கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார். இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது. இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார். இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.
இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது. எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம். உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய். திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.
அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.
இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம் தொடங்கினார் அன்னை. புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள் கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
பிருங்கி முனிவர் வழிபட்ட வரலாறு:
ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர். அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார். பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார். தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.
தேர்க்கால் இடர் தவிர்த்து ஊமை பேசிய வரலாறு:
பல காலங்கள் முன்பு கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம் தம்பதியர் சிவ பக்தகளாய் வாழ்ந்து வந்தனர். இவர்களிடத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.
பெரியவர்களின் ஆலோசனைப் படி இந்த திருச்செங்கோடு திருத்தலம் வந்து இத்தல இறைவனை வேண்டி வணங்கிட, இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் உண்டானது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயது ஆகியும் பேசும் திறனற்று இருந்தது. இதனைக் கண்டு மனம் வெதும்பிய பெற்றோர், ஈசன் அருளால் கிடைத்த பிள்ளையை ஈசனிடமே விட்டு விடுவோம் என்றெண்ணி திருச்செங்கோடு திருத்தலம் வந்தடைந்தனர்.
இதனிடையே ஏமப்பள்ளி என்னும் ஊரில், எல்லா நற் குணங்களுடன் கூடிய துறவின் மேல் விருப்பமுள்ள, சிவ பக்தன் வேலப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். வேலப்பனது கனவில் வந்த நமசிவாயம், தம்முடனே வந்திருந்து தமக்குப் பணிசெய்து வாழப் பணித்தார் சிவபிரான். அதனை ஏற்று சிவனடியாராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலப்பன். இவர் பல தொண்டுகள் புரிந்தும், இறைவனுக்கு சாமரம் வீசி திருத்தொண்டு புரிந்து வந்தபடியால் அவருக்கு சாமர வேலைப்ப பூபதி என்ற பெயரும் உண்டானது.
இந்நிலையில், இத்திருத்தலம் வந்தடைந்த காடம்பாடி தம்பதியினர், தம் குழந்தையை இறைவனிடமே ஒப்படைக்க எண்ணியபடி, வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் போது தேர் காலில் குழந்தையை வைத்து விட்டனர். தேரை இழுத்து வந்து கொண்டிருந்த வேலப்பன், இந்த தம்பதியினரின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்று இக்குழந்தை மாய்ந்தால் என் உயிரும் சேர்ந்து போகட்டும் என்று வேண்ட, அதிசயிக்கத் தக்க வகையில் ஓடி வந்து கொண்டிருந்த தேர் சக்கரம் பாலகனின் தலையைத் தாண்டிச் சென்றது. பேசாத குழந்தையும் இதழ் விரித்து பேசத் தொடங்கியது.
நமச்சிவாயம்!! நமச்சிவாயம்!!
ஞானசம்பந்தர் பெருமான் திருச்செங்கோடு வந்து சில காலம் தங்கியிருந்து சிவதொண்டு புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பருவ மாற்றத்தால், மக்களை குளிர் சுரம் பீடித்துக் கொண்டது. இதனைக் கண்டு மனம் வாடிய ஞான சம்பந்தர், இந்த சுரமென்னும் உடல் உபாதை நீங்கிட இத்தலத்திலேயே பெருமான் முன்பு பதிகம் பாடினார். இத்தலத்தில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இப்பதிகத்தை இறையன்புடன் ஓதி வந்தால் தீவினையால் வரும் நோய்கள் நம்மை பாதிக்காது என்பது தெய்வீக நம்பிக்கை.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம்:
அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெனைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
முலைத்தடம்மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தாண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்தெமைத் தீவினைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
விண்ணுல காள்கின்ற விச்சாதாரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழுப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்த உம் திருவடி அடைந்தோம்
செற்றெமைத்தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
மறக்கும் மனத்தினை மாற்றிஎம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
உருகிமலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச்சீரில் அடர்ந்து அருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந்தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழித்தும்
பாக்கியமின்றி இருதலைப்போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
பிறந்த பிறவியில் பேணிஎம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே!!
திருச்சிற்றம்பலம்!!
ஞாயிறு, 19 டிசம்பர், 2021
பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்!
பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்! இது அவர்களுடைய நம்பிக்கையாம்! அவை என்னவென்று நாமும் தெரிந்து கொள்வோமா?
பெரும் செல்வந்தர்கள் சில விஷயங்களை தொடர்ந்து நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக இறைவழியில் கடைபிடித்து வருவது உண்டு. இதை ரகசியமாகவும் அவர்கள் செய்து வருவார்கள். இதில் குறிப்பாக சேட்டு எனப்படும் வட நாட்டுக்காரர்கள் பெரும் செல்வந்தராக நிலைத்து நிற்பதற்கு இவைகளை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக அவர்களே சில குறிப்புகளில் கூறியுள்ளனர். அத்தகைய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
முதலாவதாக அவர்கள் முழு இறை நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் ஆக இருப்பார்கள். தங்களுக்கு சில நேரங்களில் போட்ட முதலீடு மொத்தமும் நஷ்டம் ஆகி விடும் என்றாலும் இறை நம்பிக்கையை அவர்கள் கைவிடுவது இல்லையாம். மீண்டும் விழுந்த இடத்திலேயே எழுந்து முயற்சி செய்து அதிக லாபம் ஈட்டி விடுவார்கள். இதிலிருந்து அவர்கள் தன்னம்பிக்கையானவர்கள் என்பது நமக்கு புரிய வருகிறது.அவர்களுடைய வீடுகளில் அதிகமாக புறாக்கள் நடமாடுவதை நாம் பார்த்திருப்போம். பெரிய பெரிய செல்வந்தர்களது வீட்டு ஜன்னல்கள் இருக்கும் மேல்தள பகுதிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் உற்று நோக்கினால் தெரிய வரும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் தங்களது வீட்டு மொட்டை மாடிகளில் புறாக்கள் போன்ற பறவைகளுக்கு தானியங்களை வைப்பது அதனுடன் சிறிதளவு தண்ணீர் வைப்பதும் வழக்கமாக வைத்துள்ளனர்.இவைகளை உண்ண வரும் புறாக்கள் தங்களுடைய கர்ம வினைகளை அழிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். நம்முடைய சமுதாயத்தில் நாம் காக்கைக்கு உணவு வைப்பது போல், அவர்களுடைய சமுதாயத்தில் பறவைகளுக்கு தானியங்கள் வைப்பது தோஷத்தை போக்கும் என்று நம்புகின்றனர். இதுவே அவர்களிடம் மேலும் மேலும் செல்வத்தை பெருக்கி தருகிறது என்பதையும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.அடுத்ததாக அவர்கள் இருக்கும் வீட்டு பகுதியில் ஆங்காங்கு இருக்கும், கண்களில் தென்படும் எறும்பு புற்றுக்கு அரிசியை வீட்டில் வைத்து இடித்து மாவாக்கி அந்த மாவை கொண்டு வந்து எறும்பு புற்றில் தூவுவார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு எறும்பு சாப்பிட்டால் கூட 100 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம் என்பது சாஸ்திரம். நம்முடைய சாஸ்திரத்தில் பச்சரிசியை பயன்படுத்தி கோலம் போட சொல்வதும் இந்த காரணத்தினால் தான். அதை சாப்பிட வரும் எறும்புகளால் நம்முடைய கர்மவினைகள் தீரும் என்பது ஐதீகம். இதனையே அவர்களும் எறும்பு புற்றுகளுக்கு அரிசிமாவு கொடுத்து வினைகளை குறைத்துக் கொள்கிறார்கள்.அதுபோல் அவர்களுடைய பகுதியில் அல்லது அவர்களது வீட்டிற்கு வரும் பசுமாட்டிற்கு தீவனம் வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பசுமாடு தெய்வீக விலங்கினமாக விளங்குவதால் பசுமாட்டிற்கு மிகுந்த மரியாதையும் அவர்கள் கொடுக்கிறார்கள். கோமியத்தை சிறிதளவில் தலையில் தெளித்துக் கொண்டு தீர்த்தமாக அருந்துவார்கள். இதனால் பாவங்கள் தீரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதை நாமும் நம்முடைய சாஸ்திரத்தின்படி பின்பற்றி தான் வருகிறோம் என்றாலும் அவர்கள் இதை தவறாமல் செய்கிறார்கள் என்பது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும் பசு மாடுகளுக்கு அவைகளைப் பாதுகாக்கும் இடங்களுக்கு சென்று தேவையான பண உதவிகளையும், தானங்களையும் தாராளமாக செய்து வருவார்கள். பசுமாட்டிற்கு செய்யும் தானம் ஆனது சந்ததியை தழைக்க வைக்கும் என்பது நம்பிக்கை. சாஸ்திரம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். நம் முன்னோர்கள் கூறியுள்ள ஒவ்வொரு விஷயமும் நம்முடைய நல்வாழ்விற்கு என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதனை கடைப்பிடித்து வருவது செல்வ வளத்தை அதிகரிக்கும். சுகபோக வாழ்வு கிட்டும் என்பதை உணர வேண்டும்.
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
🌈
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு நன்றி
என் வாழ்வில் அனைத்து வளங்களும் நிறைந்திருப்பதற்கு நன்றி
என் எண்ணங்கள் எளிதாக நிறைவேறுவதற்கு நன்றி
எனக்கு நல்ல அழகான குடும்பத்தைக் கொடுத்ததற்கு நன்றி
அறிவான ஆரோக்கியமான குழந்தைகளை கொடுத்ததற்கு நன்றி
நான் தொடும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு நன்றி
என் மனநிறைவான வாழ்க்கைக்கு நன்றி
என் அலுவலகப்பணி மன நிறைவாக செல்வதற்கு நன்றி
எனக்கு நல்ல உறவுகள் மற்றும் நல்ல நண்பர்களை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
என்னிடம் சேரும் அளவில்லா செல்வத்திற்கு நன்றி
அலுவலகத்தில் என் மேல் அனைவரும் நல்ல மதிப்பு மரியாதையுடன் இருப்பதற்கு நன்றி
நான் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு நன்றி
என் தாய் தந்தை உடல் ஆரோக்கியத்திற்கு நன்றி
என் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு நன்றி
எனக்கு தகுந்த நேரத்தில் தேவையான உதவிகளை பிரபஞ்சம் என்னிடம் சேர்ப்பதற்கு நன்றி
என்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்ய முடிவதற்கு நன்றி
நான் விரைவில் கோடீஸ்வரர் ஆவதற்கு கூடிய வாய்ப்புக்கள் தொடர்ந்து அமைந்து கொண்டிருப்பதற்கு நன்றி நன்றி நன்றி
இந்த குழுவின் மூலம் பிரபஞ்ச பேராற்றல் பற்றி தெளிவான அறிவு கிடைத்து கொண்டே இருப்பதற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...
-
தயவு செய்து அதிகமாக பகிரவும் !! இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய் வாய்புற்றுநோய் குடல்புற்றுநோய் போன்ற...
-
வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி **வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி*** நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின்...
-
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது...